தமிழரசுக் கட்சி தேசிய மாநாட்டை இடைநிறுத்தக் கோரும் வழக்கு இரண்டாவது தடவையாக விசாரணை

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை இடைநிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இரண்டாவது தடவையாக இன்று (05) திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சின்னையா இரத்தினவடிவேல், தாமும் இந்த வழக்கில் இடைபுகு மனுதாரராக இணைவதற்கான கோரிக்கையை மன்றில் முன்வைத்தார்.
இந்த கோரிக்கையை மனுதாரர் தரப்பும், பிரதிவாதிகள் தரப்பும் ஏற்றுக்கொள்ளாத போதிலும், கோரிக்கை நியாயமானது என வழக்கின் ஆறாவது பிரதிவாதியான பாராளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரன் இன்று மன்றில் தெரிவித்தார்.
இந்த வழக்கை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், மனுதாரர்களின் கோரிக்கை அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக பிரதிவாதிகள் தரப்பினர் கடந்த வழக்குத் தவணையின் போது தெரிவித்திருந்தனர்.
பாரம்பரிய கட்சியொன்று, மனுதாரர் தரப்பின் அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்வதென்பது கட்சி வரலாற்றில் பாரிய தவறாக அமைந்துவிடுமென தெரிவித்து, இந்த அறிவிப்பை முற்றாக ஏற்றுக்கொள்வதற்கு தாம் உடன்படவில்லை என M.A.சுமந்திரன் தெரிவித்தார்.
தெரிவுக்குழுவுக்கான வாக்கெடுப்பின் போது 20 உறுப்பினர்களை வாக்களிக்க தகுதியானவர்கள் என இணைத்துக்கொண்டமை தவறான விடயம் என்பதை ஏற்றுக்கொள்வதாகவும், தொகுதிக் கிளைகள் மற்றும் யாப்பு சீர்த்திருத்தம் தொடர்பான விடயங்களை நிராகரிப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இது ஒரு பொது வழக்கு என்பதுடன், மக்கள் நலன் கருதி இந்த வழக்கு வேகமாக முடிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை சட்டத்தரணி K.V.தவராசா இன்று மன்றில் சுட்டிக்காட்டினார்.
விடயங்களை கேட்டறிந்த திருகோணமலை மாவட்ட நீதிபதி T.கணேசராஜா, வழக்கு விசாரணையை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இன்றைய வழக்கு விசாரணையின் போது, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மாவை சேனாதிராஜா, ஈ. சரணபவன், C. யோகேஸ்வரன், K. சயந்தன் உள்ளிட்ட கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.
214 Views
Comments