விடத்தல்தீவில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு எதிரான வழக்கு ஆகஸ்ட் 2 ஆம் திகதி பரிசீலனை

மன்னார் - விடத்தல்தீவில் அதானி நிறுவனம் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி பரிசீலிப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டது.
விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் குமுதினி விக்ரமசிங்க ஆகிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய குழாமினால் இன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வனஜீவராசிகள் மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு சங்கம் உட்பட பல தரப்பினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மத்திய ஆசிய வான்பரப்பில் தெற்கு பயணப்பாதையில் வருடாந்தம் 15 மில்லியன் பறவைகள் சஞ்சரிக்கும் முக்கிய கேந்திரப் பகுதியாக இலங்கை காணப்படுவதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்திற்கு பருவகாலத்தில் சுமார் ஒரு மில்லியன் பறவைகள் வருவதாகவும், இந்த பாதையில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், பறவைகளின் நடமாட்டத்தில் குறிப்பிடத்தக்க இடையூறு ஏற்படும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றாலை திட்டத்திற்கு அரசியல் மற்றும் வெளிப்புற காரணிகளின் அடிப்படையில் மன்னார் தீவு தெரிவு செய்யப்பட்டதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த தீவை தெரிவு செய்வதற்கு விஞ்ஞான ரீதியான அல்லது வேறு விசேட காரணம் எதுவும் இல்லை எனவும், குறித்த நிலப்பரப்பு மிகவும் உணர்திறன் மிக்க சுற்றுச்சூழல் பிரதேசம் எனவும் மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய விசாரணையின் போது இந்திய அதானி நிறுவனம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ரொமேஷ் டி சில்வா ஆஜரானதுடன் மனுதாரர்கள் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன ஆஜரானார்.
சட்டமா அதிபர் சார்பில் கலாநிதி அவந்தி பெரேரா முன்னிலையாகியிருந்தார்.
192 Views
Comments