சட்டத் திருத்தங்கள் மூலம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் உள்ள தடைகளை நீக்க முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழு

பாராளுமன்றத்தில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் தற்போதுள்ள தடைகளை நீக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காகவே இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L. ரத்நாயக்கவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.
மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையிலோ அல்லது புதிதாக வரையறுக்கப்பட்டுள்ள முறைமையிலோ நடத்தலாம் என ஆணைக்குழு பிரதமரிடம் சுட்டிக்காட்டியதாக அவர் குறிப்பிட்டார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அதனை பாராளுமன்றத்தின் ஊடாக மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதமரிடம் சுட்டிக்காட்டியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இது தவிர உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான பொறுப்பை பிரதமருக்கு வழங்க அமைச்சரவை அண்மையில் தீர்மானித்திருந்தது.
207 Views
Comments