மேல்மாகாண வாகனங்களுக்கு சலுகை காலம்
மேல்மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 29ஆம் திகதி வரை வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவதில் அபராதம் விதிக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண பிரதம செயலாளர் ஜயந்தி விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகத்தினால் உத்தியோகத்தர்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ள விரும்பும் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மேல் மாகாண மோட்டார் வாகனத் திணைக்களத்தின் இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம், மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரத்தை ஆன்லைன் முறையின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை, அனைத்து பிரதேச செயலகங்களின் மாவட்ட பதிவாளர்களினால் வழங்கப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ் நகல்களை வழங்கும் நடவடிக்கை திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் மாத்திரம் இடம்பெறும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பதிவாளர் நாயகத்தின் கிளையின் மாவட்ட பதிவாளர் பிரிவு - சுஹுருபாய கிளை மற்றும் குருநாகல், கண்டி, மாத்தறை பிரதேச செயலகங்கள் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதேச செயலகங்கள் வாரத்தில் ஐந்து நாட்களும் உரிய சேவைகளுக்காக வழமையாக இயங்கும்.
மேலும், அனைத்து நிலப் பதிவாளர் அலுவலகங்களின் சேவைகள் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே செயல்படும்.
மேலும், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளை வழங்குவது தொடர்பான தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளது.
எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால், தமது திணைக்களத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அழககோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் ஜூலை 10 ஆம் திகதி வரை ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
126 Views
Comments