'க்ளப் வசந்த' உள்ளிட்ட இருவர் உயிரிழந்த அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு தொடர்பில் 7 பேர் கைது

வர்த்தகரான 'க்ளப் வசந்த' என அழைக்கப்படும் வசந்த பெரேரா உள்ளிட்ட தரப்பினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வௌிநாட்டில் வசிக்கும் இருவரின் வழிநடத்தலில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் தலைமையில் 5 பொலிஸ் குழுக்கள் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துருகிரிய சந்தியிலுள்ள வர்த்தக நிலையத்தில் நேற்று(08) முற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், 'க்ளப் வசந்த' மற்றும் நயன வசுல விஜேசூரிய என்ற 37 வயதான நபர் ஆகியோர் உயிரிழந்தனர்.
துப்பாக்கி பிரயோகத்தில் பாடகி கே.சுஜீவா மற்றும் க்ளப் வசந்தவின் மனைவி உள்ளிட்ட நால்வர் காயமடைந்தனர்.
209 Views
Comments