உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் இன்று(21)
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன்(21) ஐந்தாண்டுகள் பூர்த்தியாகின்றன.
ஐந்தாண்டுகள் கடந்தும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட எவருக்கும் நீதி கிடைக்கவில்லை.
இந்நிலையில் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும் காயமடைந்தவர்களுக்கு அருள் வேண்டியும் நாடளாவிய ரீதியிலுள்ள தேவாலயங்களில் இன்று விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.
தாக்குதல் இடம்பெற்று ஐந்தாவது வருட பூர்த்தியை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் விசேட சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது.
பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி பிரயன் உடக்வே, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தாக்குதல்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தினர் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் உயிர்த்த ஞாயிறு தாகுதலில் உயிர்நீத்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஞாபகார்த்தக நினைவுத்தூபில் தேவாரம் பாடி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 5 வருட பூர்த்தியை முன்னிட்டு திருகோணமலை மறைமாவட்ட சீனக்குடா புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று நினைவஞ்சலியும் நினைவுப் போராட்டமும் இடம்பெற்றது.
வீதியில் மெழுகுவர்த்தி ஏற்றி நினைவஞ்சலியும் செய்யப்பட்டன.
11 Views
Comments