சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்: டொனால்ட் ட்ரம்பிற்கு 355 மில்லியன் டொலர்கள் அபராதம்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு 355 மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்து நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்களை அளித்ததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பல ஆண்டுகளாக தன்னுடைய சொத்து மதிப்பு குறித்து தவறான தகவல்களை வழங்கி வந்ததாக ட்ரம்ப் மீது சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் நிறைவில், பெருந்தொகை அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப், அவருடைய இரு மூத்த மகன்கள், அவருடைய நிறுவனம், நிர்வாகிகள் ஆகியோர் திட்டமிட்டு தங்கள் சொத்துகள் பற்றி பொய்யான நிதி விபரங்களை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அளித்து, தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர்.
இந்த தீர்ப்பு காரணமாக ட்ரம்ப் குடும்பத்தினர் நடத்தி வரும் வணிக நிறுவனம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதுடன், நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் செயற்பட வேண்டிய கட்டாயமும் நேர்ந்திருக்கிறது.
மேலும், இதனால் எதிர்வரும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடக் கூடிய வகையில் முன்னேறிவந்த டொனால்ட் ட்ரம்ப்பிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ட்ரம்ப்க்கு அபராதம் 355 மில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ள போதும், அமெரிக்க சட்டப்படி அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பதால், அவர் சுமார் 450 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
42 Views
Comments