நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் IMF பிரதிநிதிகள் பாராட்டு

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா உள்ளிட்ட குழுவினர் இடையே கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நேற்று(150 ஆரம்பமான சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அரையாண்டு மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தற்போதைய பொருளாதார நிலைமையிலிருந்து முன்னேறுவதற்காக சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் சிறப்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பில் IMF பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் இலங்கை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது X தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.
IMF வேலைத்திட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இலங்கை அடைந்த வெற்றியை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியதாக அமைச்சரின் X பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய சமூக - பொருளாதார முன்னேற்றங்கள், IMF வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பாரிய பொருளாதார மறுசீரமைப்புகள் மற்றும் திட்டங்களை தொடர்வதற்கான இலங்கை அதிகாரிகளின் அர்ப்பணிப்பு தொடர்பில் அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதன்போது தௌிவுபடுத்தியிருந்தார்.
இதேவேளை, ஷெஹான் சேமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர், கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனையும் சந்தித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணைக்கான மீளாய்வுகளை நிறைவு செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயரையும் அரையாண்டு மாநாட்டின் போது சந்தித்து கலந்துரையாடியதாக ஷெஹான் சேமசிங்க X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உலக வங்கியின் உள்ளக மறுசீரமைப்புகளும் மாற்றங்களும் இலங்கை போன்ற நாடுகளுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பது குறித்து பரமேஸ்வரன் ஐயர் விளக்கமளித்ததுடன், இலங்கைக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உள்ளிட்ட குழுவினர் சர்வதேச புரிந்துணர்விற்கான பொருளாதார பேரவையின் கூட்டத்திலும் கலந்துகொண்டனர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
232 Views
Comments