எதிர்வரும் நாட்களில் அதிக மழையுடனான வானிலை நிலவும்; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளிலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களை அண்மித்து ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் அதிக மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வடமேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மழையுடனான வானிலையால் 06 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி கேகாலை, களுத்துறை, குருநாகல், நுவரெலியா, மாத்தளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பதுளை, எல்ல - வெல்லவாய வீதி, இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
கற்பாறைகள் சரிதல் மற்றும் மண்சரிவு அபாயத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் பலத்த மழை பெய்துவருகிறது.
214 Views
Comments