டெங்கு மற்றும் கொரோனா அறிகுறிகள் ஒத்தவை - எச்சரிக்கையாக இருங்கள்
டெங்கு மற்றும் கொரோனாவின் அறிகுறிகள் ஒத்ததாக இருக்கலாம் என தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் அனுர ஜெயசேகர கூறியுள்ளார்.
எனவே, அறிகுறிகள் குறித்து அதிக கவனம் செலுத்தி அறிகுறிகள் தெரியும் முதல் சந்தர்ப்பத்திலேயே தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுமாறு அவர் அறிவுறுத்துகிறார்.
கடந்த வருடத்தை ஒப்பிடும்போது டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் குறைவாக இருந்தாலும், அடுத்த சில வாரங்களில் இந்த நோய் பரவுவது அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் ஒவ்வொரு மருத்துவமனையிலும் டெங்கு சிகிச்சை மையங்கள் உள்ளன என்றும், பயணக் கட்டுப்பாடுகளின் போது வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருப்பது மக்களின் பொறுப்பாகும் என்றும் வைத்திய நிபுணர் அனுர ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
பொது சுகாதார ஆய்வாளர்கள் தற்போது கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் டெங்கு கட்டுப்பாட்டு கடமைகளில் கவனம் செலுத்துவது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் வைத்திய நிபுணர் அனுர ஜெயசேகர, மக்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும், தங்கள் வீடுகளைச் சுற்றியுள்ள சூழலில் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உரியது என்றும் கூறியுள்ளார்.
source:hirunews
221 Views
Comments