சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 54 பேர் கைது!
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 54 பேரும் ஜூலை 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவினர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கடற்படைத் தளத்தின் அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் கிழக்குக் கரையோரப் பகுதியில் வைத்து 54 பேரைக் கைது செய்திருந்தது.
கைது செய்யப்பட்டவர்களில் 16 மற்றும் 52 வயதுடைய இரண்டு பெண்களும் அடங்குவர்
கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்கள் கொருப்பிட்டி, வாழைச்சேனை, முல்லைத்தீவு, கலவாஞ்சிக்குடி, நிலாவெளி, உப்புவெளி, யாழ்ப்பாணம், திருகோணமலை, பனகமுவ, மட்டக்களப்பு, ஏறாவூர், புத்தளம் மற்றும் குச்சவெளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 6 பேர் குறித்த சட்ட விரோதமான நடவடிக்கையை ஏற்பாடு செய்ததற்காகவும், மற்ற 48 பேர் சட்டவிரோத குடியேற்றம் செய்ய முயன்றதற்காகவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சித்து, பணம் சம்பாதிக்கும் நோக்கில் பொய்யான தகவல்களைப் பயன்படுத்தி, கப்பல்களால் மேற்கொள்ளப்படும் மனிதக் கடத்தலில் சிக்கி, உயிரைப் பணயம் வைத்து சட்டத்தின் முன் குற்றவாளிகளாக மாறுவதைத் தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களை கேட்டுக் கொள்கிறது.
அவுஸ்திரேலிய அரசாங்கம் இவ்வாறான சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு அனுமதி வழங்காது எனவும் அவர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக நாடு கடத்தப்படுவதால் எதிர்காலத்தில் சட்டரீதியாக அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்வதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போகும் எனவும் கடற்படை சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில், சட்டவிரோத குடியேற்றத்தை ஏற்பாடு செய்யும் கடத்தல்காரர்களிடம் சிக்கி தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றும் பணத்தை இழக்க வேண்டாம் என்றும் பொலிசார் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்கள்.
40 Views
Comments