பஸ்டியன் மாவத்தை கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!
புறக்கோட்டை - பஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்திற்கு முன்பாக நபர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான எல்பிட்டியே ஜோஷா என அழைக்கப்படும் ஜோசப் குமார இன்று (04) காலை பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று பெம்முல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 30 ஆம் திகதி பஸ்டியன் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் காயமடைந்தார்.
அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், இன்று அதிகாலை கம்பஹா உலகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றைச் சோதனையிடச் சென்றுள்ளனர்.
வீட்டை சோதனை செய்து கொண்டிருந்த போது, அந்த வீட்டை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென மீண்டும் புறப்பட்டு சென்றது.
பின்னர், விசாரணை அதிகாரிகள் மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்றுள்ளனர். அங்கு பண்டாரவத்தை - பெம்முல்ல வீதியில் படபொல - தலுபொத்த வயல்வெளிக்கு அருகில் தப்பிச் சென்ற சந்தேக நபர் மோட்டார் சைக்கிளை வீதிக்கு அருகில் நிறுத்திவிட்டு பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
47 Views
Comments